இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சுற்றுப்புற சூழல் மாசு பெரிய தீங்குகளை விளைவிக்கிறது. நமக்கு தெரிந்தும், தெரியாமலும் பல மாசுக்களை உருவாக்க காரணமாக நாம் இருக்கிறோம். 

வளி மாசடைதல் (Air pollution) என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள்துகள் பொருட்கள், உயிரியற் பொருட்கள் போன்றவை வளி மண்டலத்தில் கலந்து காற்றை மாசுபடுத்துதலாகும் (புவியைச் சுற்றி எங்கும் பரவியுள்ள வாயுக்களால் ஆன காற்று மண்டலத்தை வளி மண்டலம் என அழைக்கின்றோம்). இதனால் மனித சமுதாயம்  மட்டுமன்றி விலங்குகள், தாவரங்கள் போன்ற உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன 

கார்பன் டை ஆக்சைடு (CO2) முன்னணி காற்று மாசுபடுத்தியாக கருதப்படுகிறது. இதை மோசமான காலநிலை மாசுபடுத்தி என்றும் கூறலாம். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிற்புரட்சிக்கு முன்பு அடி வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு மில்லியனுக்கு 280 பகுதிகளாக இருந்தது. இன்று இதன் செறிவு அதிகரித்து மில்லியனுக்கு 405 பகுதிகள் என்ற அளவில் உள்ளது. கார்பன் டை ஆக்சைடின் அதிகரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வருங்கால சந்ததியினர் நமக்கு மிகவும் முக்கியம்

நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு மாசு இல்லாத தூய்மையான ஒரு இந்தியாவை கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தற்போது பலர் இடையில் உருவாகி இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க  அம்சம் ஆகும். பல இளைஞர்கள் தங்களின் ஸ்டார்ட்அப் கம்பெனிகள் மூலமாக இதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

என்ன செய்கிறார்கள்?

வளி மண்டலத்தில் இருந்து மாசுபாட்டைக் கைப்பற்ற முறைகள் உள்ளன, ஆனால் அடுத்த பெரிய கேள்வி கைப்பற்றப்பட்ட மாசுபாட்டை என்ன செய்வது என்பதுதான்? இதை ஒரு புதிய வடிவத்தில் மேம்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கட்டுமானத் துறையில் இதை உபயோகப்படுத்த தீர்மானித்தார்கள். வழக்கமான கட்டுமானப் பொருட்கள் அதன் நீண்டகால உழைப்பு மற்றும் மறுபடி உபயோகிக்கும் தன்மை காரணமாக நம்மிடையே தொடர்ந்து இருக்கின்றன. இந்த கார்பனை எடுத்து ஒரு கட்டிடப் பொருளில் செலுத்தினால் என்ன என்று கேட்டுக் கொண்டதன் விளைவு தான் இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியின் “கார்பன் டைல்கள்” நம் முன்னே இருக்கின்றன.

எப்படி செய்கிறார்கள்?

ஒவ்வொரு கார்பன் டைல்ஸும் தொடக்கத்திலிருந்தே கையால் செய்யப்படுகிறது. வெட்டுதல், வடிவமைத்தல், இணைத்தல், நிரப்புதல் மற்றும் கடைசியாக ஓடு அமைத்தல் ஆகியவற்றுடன் செயல்முறை தொடங்குகிறது. கைப்பற்றப்பட்ட மாசுபாட்டிலிருந்து (Pollution) தீங்கு விளைவிக்கும் ஹெவி மெட்டல் அசுத்தங்கள் அகற்றப்படுகிறது. மேலும் கார்பன் டைல்ஸுகளை வடிவமைக்க சிமென்ட் மற்றும் மார்பிள் போன்ற இயற்கை பொருட்களின் கலவையுடன் இணைக்கப்படுகிறது. வழக்கமான டைல்ஸ்கள் தயாரிப்பை ஒப்பிடும்போது முழு செயல்முறையும் குறைந்த அளவு எரிசக்தியை மட்டுமே பயன்படுத்துகிறது.

என்னென்ன வடிவங்களில் கிடைக்கிறது?

இதன் வடிவங்களை பார்க்கும் போது செட்டிநாடு ஆத்தங்குடி டைல்ஸ்களை ஞாபகப்படுத்துகிறது. அங்கும் கருமை நிறம் அதிகமாக சேர்க்கப்படும். ஆனால் இதில் கார்பன் சேர்க்கப்படுவதால் டைல்கள் சாம்பல் நிறம் முதல் கருமை நிறம் வரை இருக்கிறது.

பல வடிவங்களில்,  டிசைன்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிசைன்களை கீழ்கண்ட லிங்கில் சென்று பார்க்கலாம். https://www.carboncraftdesign.com/carbontile – இந்த லிங்கில் காலரி என்ற பகுதியில் பார்க்கலாம். இந்த டைல்ஸ்கள் பாலீஷ் இல்லாமல் வருகிறது. பின்னர் பாலீஷ் போட வேண்டும். 

என்ன பயன்?

ஒரு கார்பன் டைல் தயாரிப்பு 30 ஆயிரம் லிட்டர்கள் காற்றை சுத்தப்படுத்துவதற்கு சமமாக இருக்கிறது. இந்த கம்பெனியின் முயற்சிகளில் ஈரோட்டை சேர்ந்த இளைஞர் கிரிபிரசாத்தும் உதவியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் இணையதள முகவரி www.carboncraftdesign.com

Spread the lovely business news