கொரோனா வைராஸால் பாதிக்கப்பட்ட கம்பெனிகளுக்கு எழும் தற்காலிக பணப்புழக்க தட்டுப்பாட்டை  சரி செய்வதற்காக தற்காலிக கடன் வசதியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏற்படுத்தியிருக்கிறது. கோவிட் 19 வைரஸ் பாதிப்பால், வெளியில் இருந்து வரவேண்டிய பாக்கிகள் தள்ளிப்போகும் சூழ்நிலை பல கம்பெனிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இது கம்பெனிகளின் தொடர் இயக்கத்தை பாதிக்கும். ஆதலால் இந்த கடன் திட்டத்தை ஸ்டேட் பாங்க் அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற வங்கிகளும் பின் தொடரும் என நம்பலாம்.

இந்த திட்டம் 2020 ஜூன் 30 வரை அமலில் இருக்கும்.

அனைத்து நிலையான கணக்குகளும் (Standard Accounts) இந்தக் கடனுக்கு தகுதியானவை. இருப்பினும், சிறப்பு கணக்குகள் என வகைப்படுத்தப்பட்ட  – எஸ்எம்ஏ 1 (Special Mention Accounts – 30-60 நாட்களுக்கு இடையில் தாமதமானது) மற்றும் எஸ்எம்ஏ 2 (Special Mention Accounts – 61-90 நாட்களுக்கு இடையில் தாமதமானது) இந்த கடன் வசதியைப் பெற தகுதியற்றவை.

கடன்கள் 7.25 சதவீதம் (ஆண்டுக்கு) நிலையான வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.

சிறப்புத் திட்டத்தின் கீழ் பெறக்கூடிய அதிகபட்ச கடன் ரூ.200 கோடியாக இருக்கும்.  அனுமதிக்கப்பட்ட தொகையை ஒரே நேரத்தில் பெற முடியும். 

கடனை வழங்கிய நாளிலிருந்து ஆறு மாத கால அவகாசத்திற்குப் பிறகு கடன்கள் ஆறு சமமான மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். அதாவது கடன் வாங்கிய ஒரு வருடத்திற்குள் திருப்பி செலுத்தப்பட வேண்டும்.

வாங்கும் கடனுக்கு தகுந்த பிணையங்கள் (ஸ்டாக்) இருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாகும்.

Spread the lovely business news